கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தடையின்றி நீர் கிடைக்கும்: தமிழிசை அடடே!
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் நமக்கு காவிரி நீர் கிடைக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் உள்ள நல்லுறவு சீராக பாதுகாக்கப்படும் என்றும் அதன்மூலம் காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்குதடையின்றி நமக்கு நீர் கிடைக்கும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இரு மாநில நல்லுறவு
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது. நிச்சயமாக அங்கு பா.ஜ.க.ஆட்சி அமைப்பது உறுதி. ஏனென்றால் பொதுமக்கள் காங்கிரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். மேலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் உள்ள நல்லுறவு சீராக பாதுகாக்கப்படும். காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
வரைவு திட்டம் மூலம் நீர் கிடைக்கும்
மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, காவிரி அவர்களுக்கு சொந்தமானது என்றும், தமிழகம் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு 18 மாதம் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளூவர் சிலை எடியூரப்பாவால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்திற்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார். அதனை கேட்க இங்கு யாரும் இல்லை. காவிரி நீர் வரைவு திட்டம் வர இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். 2 மாநிலங்கள் நதிநீரை பங்கீட்டு கொள்ளும் போது எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்மறை அரசியல் எடுபடாது
10 வருடங்கள் தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சி செய்த போது அவர்கள் காவிரி விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் மதசார்ப்பற்ற கட்சிகள் இணைய வேண்டிய காலகட்டம் இது என்று கூறியுள்ளார். மதசார்பற்ற கட்சி என்றுகூறிக்கொள்ளும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 15 உயிர்களை பலி வாங்கி இருக்கிறார்.பிரிவினையை உருவாக்கிய வாட்டாள் நாகராஜ், லிங்காயத் சமுதாய விவகாரத்தில் சித்தராமையா ஆகியோருக்கு கர்நாடகா தேர்தல் மூலம் சரியான அடி விழுந்துள்ளது. எதிர்மறை அரசியல் இனி எடுபடாது.
நாடு முழுதும் நல்ல மாற்றம்
கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்துள்ளதாக சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஓட்டு சதவீதத்தை விட மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒட்டு மொத்த மக்களின் மனநிலையும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. 40 இடங்களில் இருந்து 104 இடங்களுக்கு வந்திருக்கிறது. மிகப்பெரிய கூட்டணி இல்லாமல் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் தற்போது ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.