காண்ட்ராக்டர் சுப்ரமணியன் தற்கொலை - மாஜி அமைச்சர் பழனியப்பன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
காண்ட்ராக்டர் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாஜி அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை: அரசு மருத்துவமனை ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாஜி அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியம் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய 4 பக்க கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுப்ரமணியன் எழுதியதாக கூறப்படும் அந்த கடிதத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பழனியப்பனும், சில அதிகாரிகளும், கான்ட்ராக்டர் பி.எஸ்.கே. தென்னரசுவுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே கடந்த 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நடந்த தில்லுமுல்லுகள் என்னென்ன என்பது பற்றி வருமான வரித்துறையினர் தோண்டி துருவ உள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இதனிடையே சுப்ரமணியன் தற்கொலை வழக்கு விசாரணைக்கு இன்று பிற்பகல் ஆஜராகுமாறு பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பனுக்கு நாமக்கல் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனையடுத்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் மாஜி அமைச்சரும் எம்எல்ஏவுமான பழனியப்பன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சில மாதங்கள் எந்த வித பரபரப்பும் இன்றி இருந்த சுப்ரமணியன் தற்கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.