நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. வெளிநாட்டு பறவைகள் வருகையால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்களுக்கு ஆசியா, ஐரோபபிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பறவைகள் வந்து செல்கின்றன. இடம் விட்டு இடம் நகர்வதற்காக இந்த பறவைகள் வந்து செல்கின்றன.
இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
ஏட்ரீ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கணேஷ், பெங்களூரூ பறவைகள் நிபுணர்கள் 4 பேர் தூத்துக்குடி முத்து நாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இநத கணக்கெடுப்பு துவங்கியுள்ளனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிந்து இந்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, ராஜவல்லிபுரம், வாகைக்குளம், கடையம், முக்கூடல், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், பெருங்குளம், ஆறுமுகமங்கலம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்த கணக்கெடுப்பின் போது மங்கோலியா வரிதலை வாத்து, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மஞ்சள் வாலாத்தி, ஊசிவால் வாத்து, மற்றும் உள்ளூரை சேர்ந்த நீர் காகங்கள், அரிவாள் மூக்கன் உள்ளி்ட்ட பறவை இனங்கள் நீர் நிலைகளில் அடையாளம் காணப்பட்டது.
இன்று மாலை 4 மணியுடன் இந்த கணக்கெடுப்பு முடிகிறது என்று ஏட்ரீ நிறுவன ஆராய்ச்சியாளர் மதிவாணன் தெரிவி்த்தார்.