டெல்லியில் தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள்.. மத்திய அரசு மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சல்
கடந்த 13 நாள்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுத்து கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுத்து கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரூ.40,000 வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு கோரிய நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று நடிகர்கள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செ்விசாய்க்காத நிலையில் விரக்தி அடைந்த இரு விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர்.
இதுகுறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கையில், மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. மேலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து கேட்கவில்லை. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்து தற்கொலை மிரட்டல் முடிவில் ஈடுபட்டுள்ளனர்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகத்தில் கிளர்ச்சி வெடிக்கும். எனவே விவசாயிகளின் பிரச்சிகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார் அவர்.