கலாம் நினைவிடத்திற்கு இடம் கொடுத்ததற்காக மத்திய அரசு நன்றி கூறியுள்ளது.. சொல்கிறது தமிழக அரசு
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்காக மத்திய அரசு நன்றி தெரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
டாக்டர் கலாம் உடல் அடக்கம் நடந்த இடம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. அங்கு மாடுகள் திரிகின்றன. குப்பை மேடாக அது மாறி வருவதாக பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது. கலாம் குடும்பத்தினரும் இந்த அவல நிலை குறித்து வேதனை அடைந்துள்ளனர்.
அங்கு உரிய நினைவிடம் எடுக்காமல் மத்திய மாநில அரசுகள் தாமதம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமேசுவரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம், கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் அன்பு பாராட்டப்பட்ட இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும், இந்தியாவின் மிக உயர் விருதான பாரத ரத்னா விருதை பெற்றவராகவும், அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் திருமகனாகவும் விளங்குகிறார்.
அவரது திடீர் மறைவினை அறிந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த வேதனையுற்றார். அதோடு, அப்துல்கலாமின் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நடைபெறவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, உடனடியாக அரசு இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, அவரது நல்லடக்கம் ராமேசுவரத்தில் 30-7-15 அன்று நல்ல முறையில் நடைபெற்றது.
கடந்த 7-8-15 அன்று பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது, அப்துல் கலாமை நல்லடக்கம் செய்த இடத்தில் மத்திய அரசின் சார்பில் தேசிய நினைவகம் அமைக்க உள்ளதாகவும், அதற்காக தமிழ்நாடு அரசு தேவையான நிலத்தினை வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா தேவையான நிலத்தை வழங்க ஆணை பிறப்பித்தார். 13-8-15 நாளிட்ட கடிதத்தில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர், நினைவகம் அமைக்கத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய கடிதம் எழுதினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், பாம்பன் குரூப் கிராமம், புல எண்149/1-ல் 0.55.0 தீ ஹெக்டேர் (1.36 ஏக்கர்) நிலம், 2-9-15 தேதியிட்ட வருவாய்த்துறை, அரசாணையின்படி நிலக்கிரயமின்றி மத்திய அரசுக்கு நிலமாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது.
அப்துல்கலாமின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அப்துல்கலாமுக்கு ராமேசுவரத்தில் மத்திய அரசு நினைவகம் அமைக்கும் என்று அறிவித்தார். நினைவகம் அமைப்பது குறித்து ஒரு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழுவின் முதல் கூட்டம் 6-11-15 அன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அப்துல்கலாமுக்கு நினைவகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார். தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.