தமிழகத்திற்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுறுவல்.. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுத்துறை மாநில அரசை எச்சரித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஸ்வாதி என்ற இளம் பெண் பலியானார். இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு இந்த வழக்கில் மாநில அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. தானே விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாட்னா ரயில் நிலைய குண்டு வெடிப்பில் கைதான இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளிடம் மத்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மேலும் சில தீவிரவாதிகள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும், ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது.
இதுபற்றி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அதில், கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள அந்த தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும், தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு குறித்து சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு உள்ளனர். பல மாநிலங்களில் கூடி சதித்திட்டம் தீட்டிய பின்னர் குண்டு வைத்து இருக்கிறார்கள். இதனால், சிபிசிஐடி போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் தலைமையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது. குற்றவாளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் ஓரளவு தடயங்களும், தகவல்களும் எங்களுக்கு கிடைத்து உள்ளது. குற்றவாளிகள் எந்நேரத்திலும் பிடிபடலாம். அதற்கு காலக்கெடு சொல்ல முடியாது.
அதே நேரம், இந்த வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் சென்டிரல் ரயில் நிலையத்தில் பதிவான வீடியோவில் பதிவாகி இருந்த சந்தேகத்துக்கு இடமான நபரின் படத்தை நேற்று முன்தினம் வெளியிட்டோம்.
அந்த படத்தை பார்த்துவிட்டு, பொதுமக்கள் பலர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல தகவல்களை கொடுத்து வருகின்றனர். அவற்றின் அடிப்படையில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். எனவே, குற்றவாளிகளை விரைவில் நெருங்கிவிடுவோம். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து விடுவோம் என்றார்.
பாதுகாப்பு தீவிரம்
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடுமிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications