முதல்வரை மாத்து! ஈபிஎஸ்க்கு தினகரன் மிரட்டல்!
ஓபிஎஸ் வேண்டாம்... ஈபிஎஸ் வேண்டாம் கட்சியில் சீனியரை முதல்வராக்கலாம் என்று தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் சொல்லியிருக்கிறாராம் டிடிவி தினகரன்.
சென்னை: தனக்கு கட்டுப்படாத முதல்வரை மாற்ற முடிவு செய்து விட்டாராம் டிடிவி தினகரன். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் விட்டு அதை எடப்பாடி பழனிச்சாமியிடம் சூசகமாக கூறியிருக்கிறார். கட்சியில் உள்ள சீனியர் ஒருவரை முதல்வராக்கலாம், கட்சியை இணைக்கலாம் என்று தினகரன் சொன்னதாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினார்களாம்.
தங்களை சுதந்திரமாக செயல்படவிட மறுக்கிறார், அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிடுகிறார் என்கிற கோபம் தினகரன் மீது எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அமைச்சத்களுக்கும் இருந்தது.
தினகரனின் ஆதிக்கத்தை ஒழிக்க நடராஜனும் திவாகரனும் கைகோர்த்தார்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் நடராஜன், திவாகரனுக்கு ஒத்துழைக்கத் துவங்கினார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக 50 சதவீதம் இயக்கினார்கள் திவாகரனும் நடராஜனும்.
இதையெல்லாம் சிறையிலிருந்த போது கொஞ்சமும் வெளியே வந்தபிறகு அனைத்தையும் அறிந்த தினகரன் டென்சன் ஆனார்.
எம்எல்ஏக்கள் அணிவகுப்பு
இதனையடுத்து எடப்பாடியை மிரட்ட, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை பாரீர் என தன்னை சந்திக்க எம்.எல்.ஏ.க்களை வரவழைத்து காட்டினார் தினகரன். இது எடப்பாடி பழனிச்சாமியை டென்சன் ஆக்கவே அவரும் பதிலுக்கு கோட்டையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.
கோட்டையில் சந்திப்பு
இந்த சூழலில் தான், இணைப்பு முயற்சிக்கு எடப்பாடிக்கு விருப்பம் இல்லைங்கிற ரகசியம் தெரிந்தது. இதனை அடுத்து சில பல ஆலோசனைகளை நடத்திய தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்களை எடப்பாடியை சந்திக்க சொன்னார். சந்திப்பும் கோட்டையில் நடந்தது.
முதல்வர் பதவி
அப்போது, கட்சி இணைய வேண்டும் அதற்கு இடைஞ்சலாக இருப்பது முதல்வர் பதவிதான். அதனால், முதல்வர் பதவியில் நீங்களும் வேண்டாம் பன்னீரும் வேண்டாம். கட்சியிலுள்ள சீனியர் ஒருவரை கொண்டு வரலாம். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். மறுத்தால், எங்களின் ஆதரவு உங்களுக்கு இல்லை என முன்வைத்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள்.
பேசிட்டு சொல்றேன்
இந்த திட்டத்தை கேட்டு அதிர்ந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை வெளிப்படுத்திக்கொள்ளாமல், அமைச்சர்களிடம் விவாதித்து விட்டு சொல்கிறேன் என சொல்லி அனுப்பி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போ ஒரு ஓட்டுக்கு 4வது முதல்வரை பார்க்கப் போகிறதா தமிழகம்.