பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் 'செக்கச் சிவந்த வானம்'! வலுக்கும் கண்டனங்கள்
சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியுள்ள, 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளர்கள் இழிவாக காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் மோசமான கருத்து ஒன்றை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.
இதனால் கொதிப்படைந்த பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி. சேகர் வீட்டை முற்றுகையிட்டனர். போராட்டங்களை நடத்தினர்.
[ மர்மமாக செத்து மடியும் காட்டு ராஜா.. 20 நாளில் 21 சிங்கங்கள் மரணம்.. கிர் காடுகளில் என்ன நடக்கிறது! ]
எஸ்வி சேகர் எஸ்கேப்
இதையடுத்து காவல்துறையினர் எஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரைத் தேடி வருவதாகவும் கூறினார். ஆனால் நீதிமன்றத்தின் கெடுபிடிக்கு நடுவேயும், காவல்துறை ஆர்.எஸ்.வி சேகரை கைது செய்ய முடியவில்லை. எனவே எஸ்.வி.சேகர் குறித்தும், காவல் துறை குறித்தும் சமூக வலைத்தளங்களில், கிண்டல், கேலி பதிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆபாச காட்சிகள்
இந்த நிலையில்தான் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் எஸ்.வி. சேகரின் கருத்துக்களுக்கு ஆமாம் போடுவது போல காட்சிகள் இடம் பிடித்துள்ளன.
திரைப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவரான, அரவிந்தசாமி, திருமணத்தை தாண்டி ஒரு பெண் பத்திரிகையாளருடன் கள்ள உறவு வைத்துக் கொள்வதாக, படத்தில் காண்பிக்கப்படுகிறது. அந்த பெண் பத்திரிக்கையாளர், மிக சிறிய ஆடையை அணிந்துகொண்டு ஆபாச தோற்றத்துடன் வலம் வருகிறார்.
பத்திரிகையாளர்கள் கண்டனம்
அந்தப் பெண் பத்திரிக்கையாளரை டிவி கூத்தாடி என்று அழைப்பது போல படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பெண் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் குறித்து யாரோ எழுதிய வசனத்திற்கு நீங்கள் நியாயம் கற்பிக்க முயற்சி செய்கிறீர்களா மணிரத்தினம்? இதற்கு உங்களுக்கு கடுமையான கண்டனங்கள் என்று இந்த பெண் பத்திரிக்கையாளர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இயல்புக்கு மாறானது
தமிழக பெண் பத்திரிகையாளர்கள் யாருமே இவ்வாறான ஆடைக் கலாச்சாரம் இல்லாதவர்கள். ஆனால் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் திரைப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்பதை, கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களுக்கு கூட புரியும். அப்படியானால் மணிரத்தினத்தின் உள்நோக்கம் என்ன? எஸ்.வி சேகருக்கு ஆதரவளிப்பதுதானா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
நெட்டிசன்கள் ஆதங்கம்
இதுதான் சைக்கிள் கேப்பில் சிந்து பாடுவது. மணி வகையறாக்களின் திறமை, என்று இந்த நெட்டிசன் கூறுகிறார். இந்த சமூகத்தில் ஒரு எஸ்.வி.சேகர் மட்டும் கிடையாது. நிறைய சேகர்கள் இருக்கிறார்கள் என்பதை செக்கச் சிவந்த வானம் நிரூபித்து விட்டது.