தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: அடையாற்றில் வெள்ளப்பெருக்கு
காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அடையாற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவாரகாலமாக கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் அடையாறு, கொற்றலை, கூவம் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 1500 அடியில் இருந்து 2000 அடியாக அதிகரிக்கப்படுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 16 ஆயிரம் அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.