25 ஆவது முறை உடைந்து சிதறிய சென்னை விமான நிலைய கண்ணாடி மேற்கூரை..வெள்ளிவிழா எடுக்கலாமே
சென்னை: நவீனமான முறையில் புதுப்பிக்கப்பட்ட சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவானது நேற்று 25ஆவது முறையாக உடைந்து சிதறியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் ரூபாய் 2015 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திறப்பு விழா நடந்தது.
அதன்பின் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விமானநிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் தொடர்ச்சியாக 24 முறை உடைந்து விழுந்து விபத்துக்கள் நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு 25 ஆவது முறையாக விபத்து ஏற்பட்டது.உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில் 7அடி உயரம் 5அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடை ந்து விழுந்து நொறுங்கியது.
அப்போது விமானம் வராததால், பயணிகள் அந்த வழியாக வரவில்லை. அதே போல், விமான நிலைய ஊழியர்களும் அங்கு இல்லை. இதனால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
25 முறையாக கண்ணாடி கதவு உடைந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.