போரூர்: மீட்புப் பணியில் 300 வீரர்கள்.. இடிபாடுகளை அகற்ற 2 நாட்கள் ஆகும் எனத் தகவல்
சென்னை: போரூரில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிட இடிபபாடுகளை முழுமையாக அகற்ற இரண்டு நாட்கள் ஆகும் என தேசிய பேரிட மீட்பு குழு கண்காணிப்பாளர் செல்வன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 260 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
11 பேர் பலி...
இன்று காலை நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிகை 11 ஆக அதிகரித்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 26 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் ஆகலாம்...
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்ற இரண்டு நாட்கள் ஆகும் என தேசிய பேரிடர் மீட்பு குழு கண்காணிப்பாளர் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கட்டிட இடிபாடுகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருவதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நவீன கேமிராக்கள் பயன்படுத்தபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய விபத்து...
தென்னிந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டிட விபத்து இதுதான் எனத் தெரிவித்துள்ள செல்வன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் குரல் கேட்டு அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கட்டிட இடிபாடுகளை முழுமையான அகற்றில்தான் அனைவரையும் மீட்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணி...
மீட்புப் பணியில் துணை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, கமாண்டோ படையினர், தீயணைப்புப் படை வீரர்கள், மெட்ரோ ரயில் பணியாளர்கள் என சுமார் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.