கட்டிட விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்– ஜெயலலிதா
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 லட்சம் ரூபாய் அல்லாமல், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும், கூடுதலாக 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்து இடிபாடுகளில் கட்டிடத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்ற செய்தி அறிந்தவுடன், அவர்களை உடனடியாக விரைந்து மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையினை செய்ய நான் ஆணையிட்டதன் பேரில், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் துயரச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
அரசு செலவில் சிகிச்சை
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் நான் ஆணையிட்டேன். இது மட்டுமல்லாமல், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் மருத்துவச் செலவினையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு உடல்
மேலும், இறந்தவர்களின் உடல்களை தமிழக அரசின் செலவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லவும் ஏற்கெனவே நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
நேரில் ஆறுதல்
இதனைத் தொடர்ந்து, மேற்படி சம்பவம் நடந்த இடத்தை 29.6.2014 அன்று நான் நேரில் சென்று பார்வையிட்டு, இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, 50,000 ரூபாய்க்கான காசோலைகளை நான் வழங்கினேன்.
ஆந்திர முதல்வர் அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு புரியும் வகையில், அவர்களிடம் தெலுங்கு மொழியில் உரையாடி ஆறுதல் தெரிவித்தேன். இந்தச் சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
கூடுதலாக ரூ. 5லட்சம்
அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 லட்சம் ரூபாய் அல்லாமல், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.