போரூர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மதுரைக்காரர்கள்!
சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான அடுக்குமாடிக் குடியிருப்பில், கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பை எழுப்பியவர்களான மனோகரன் மற்றும் அவரது மகன் முத்துக்காமாட்சி ஆகிய இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மதுரை, தேனியைச் சேர்ந்த கொத்தனார், சித்தாள்களையே அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை பார்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மதுரை, தேனி தவிர்த்து திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 குடும்பங்களும் இங்கு தங்கி வேலை பார்த்துள்ளது.

இவர்கள் தவிர மற்றவர்கள் ஆந்திரா, ஒடிஷா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மதுரை மாவட்டம் பேரையூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் வேலை பார்த்துள்ளனர். அனைவரும் இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இறந்து அடையாளம் காணப்பட்ட 11 பேரில் மருதுபாண்டியன் என்பவர் மட்டும் பேரையூரைச் சேர்ந்தவர்.
காயமடைந்தவர்களில் பிரபு, மருதமுத்து, பஞ்சாட்சரம், முத்துப்பாண்டி, பூமிநாதன், செல்வபாண்டி, விஜயகுமார் ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள்.
ராஜீவ், ராஜா, பேய்க்காமன் ஆகியோர் தேனியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications