தடுப்பு சுவரை உடைத்து ரயில் பாதையில் புகுந்த பஸ்... அதிர்ஷ்டவசமாக 70 பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னை: சென்னையில் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் மற்றும் போக்குவரத்துத் துறை காவலரின் சாதுர்யமான நடவடிக்கைகளால் பேருந்தில் இருந்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்தது அரசுப் பேருந்து ஒன்று. அப்போது தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வந்தது. பேருந்து அந்த வாகனத்தின் மோதி விடாமல் இருக்க முற்பட்டு பேருந்தைத் திருப்பினார். இதனால் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ரயில் தண்டவாளத்தில் சிக்கியது.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. சட்டென நடக்க இருந்த விபரீதத்தை உணர்ந்த போக்குவரத்துத்துறை காவலர் அருண் பிரசாத், விரைந்து சென்று தான் அணிந்திருந்த சிவப்பு நிற ஒளிரும் கோட்டை ஆட்டிக் காட்டியதால் ரயிலின் வேகம் குறைந்தது.
இதற்கிடையே, ரயில் வருவதைக் கண்டு அப்பேருந்தின் டிரைவர் நாகூர் கனி, அதிவிரைவாக பேருந்தை தண்டவாளத்தில் இருந்து பேருந்தை வெளியேற்றினார். பேருந்து தண்டவாளத்தில் இருந்து வெளியேறியவுடனேனே, அந்த இடத்தில் ரயில் கடந்தது.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த பேருந்து ஓட்டுநரையும், போக்குவரத்துத் துறை காவலரையும் மக்கள் பாராட்டினர்.