தெருவெங்கும் சாக்கடை நீர்.. அமெரிக்காவில் அல்ல.. சென்னை வண்ணாரப்பேட்டையில்தான்!
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி சாலை பக்கம் போவோர் வருவோர் தினசரி முனுமுனுக்காத, புலம்பாத நாளே இல்லை. அப்படி ஒரு கொடுமையை இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர்.
எம்.சி.சாலையில் உள்ள டிரெய்னேஜ் அடிக்கடி அடைத்துக் கொள்கிறது. இதனால் தெருவெங்கும், சாலையெங்கும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களால் நிம்மதியாக இங்கு வசிக்க முடியவில்ல. நடந்து போக முடியவில்லை.
இப்பகுதி குடியிருப்புகள் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களையும் பெரிய அளிவில் கொண்டதாகும். இதனால் மக்கள் மட்டுமல்லாமல் வர்த்தக நிறுவனத்தினரும் அங்கு வரும் வாடிக்கையாளர்களும் கூட பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
வணிக வளாகத் தெரு
எம்.சி ரோடு அருகில் உள்ள மணிகண்டன் 5வது தெரு வணிக வளாகங்கள் நிறைந்த தெரு. அந்தத் தெருவில் சாக்கடை அடைப்பு காரணமாக, சாலைகள் குண்டும் குழியுமாகவும் நடைபாதைக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலை மிகவும் மோசமாக இருக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள்
மேலும் எதிர்புறத்தில் பள்ளிக்கூடம் அமைந்திருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்த சாலையைத்தான் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்கள். வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது.
தவறி விழும் அவலம்
சில பிள்ளைகள் அந்த சாலையைப் பயன்படுத்தும் போது சாக்கடையில் தவறி விழுகிறார்கள். மேற்கொண்டு தற்போது மழைக் காலம் என்பதால் சாலையில் சாக்கடை நீர் தேங்கி நோய் தொற்றுக்கும் வழிவகுக்கும். கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வரும் அபாயமும் உள்ளது.
நிரந்தரத் தீர்வு இல்லை
நெருக்கடி அதிகம் மிகுந்த சாலை என்பதால் கடந்த நான்கைந்து வருடங்களாக இதை மாகராட்சி கார்ப்பரேஷன் கவனத்திற்கும் இப்பகுதி மக்கள் பலமுறை கொண்டு சென்று புகார் கொடுத்துள்ளனர். ஆனால் நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாலையில் சாக்கடை நீர் ஓடி அடைத்துக் கொள்கிறது.
மக்களின் கோரிக்கை
அசுத்தமான வாடையும் வீசுவதால் பொதுமக்களும், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பள்ளிக்குழந்தைகளும் மிகவும் அவதியுறுகிறார்கள். ஏதாவது செய்யுங்கள் மாநகராட்சி அதிகாரிகளே.. அமெரிக்கா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஏதோ சுகாதாரமான முறையில் நடமாடக் கூடிய அளவுக்காவது செய்து தரலாமே!