தண்ணீர் தேசமான சென்னை புறநகர்... வெள்ளநீரை வெளியேற்றக்கோரி நள்ளிரவில் போராட்டம்
விட்டு விட்டு மழை பெய்வதால் சென்னை புறநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. தண்ணீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
சென்னை: சென்னையில் 3வது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஏராளமான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மழைக்கு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி அருகிலுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. மழை பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சம்
நீர்தேக்க பகுதிகள் உடையும் நிலையில் உள்ளதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இடைவிடாது மிரட்டும் மழையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
கடந்த திங்கட்கிழமை முதல் விட்டு விட்டு கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. செவ்வாய்கிழமையன்று பகலில் மழை விட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், தமிழக கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்ததால் அன்று இரவே மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது.
தண்ணீர் தேசமான சென்னை புறநகர்
விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் தாழ்வான இடங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் தண்ணீர் புகுந்தது. சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், தரமணி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நீர்த்தேக்கங்களிலும் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிவதால் ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஏரிகள் உடையும் நிலையில் உள்ளது.
வெளியேறும் மக்கள்
பருவமழை தொடங்கிய 3 நாட்களுக்குள்ளேயே குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் அனைவரும் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற பீதியில் உள்ளனர். முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் விஷ ஜந்துகள் வரும் என்று அஞ்சி புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்தனர்.
வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம்
சென்னை நகரில் இருந்து புறநகர் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அரசை பொறுத்தவரை, அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. குழு அமைக்கப்பட்டுள்ளது, உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சியிடம் போதிய உபகரணங்கள் கையிருப்பு இல்லாததால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் வெள்ளநீரை வெளியேற்றக்கோரி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.