டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டத்தின்போது 23 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீதான வழக்குகளை நீதிபதிகள் ரத்து செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவது, நேரத்தை குறைப்பது, ஆண்டுக்கு 500 கடைகளை படிப்படியாக மூடுவது என்பன உள்ளிட்டவற்றை அமல்படுத்துவது தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்தீபன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உரிமம் இல்லாத டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் என்று தமிழக அரசு பதில் மனுவில் கூறியது. அதில் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கெனவே 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகளை 12 மணி என்று மாற்றினீர். ஆனால் அந்த நேரத்திலும் மதிய உணவு அருந்தாமல் கூட டாஸ்மாக் கடையில் காத்து கிடக்கும் நிலை உள்ளது.
இதனை தடுப்பதற்கு இன்னும் 2 மணி நேரம், தாமதமாக அதாவது 2 மணிக்கு திறந்தால் என்ன. இதுஅரசின் கொள்கை முடிவு என்பது எங்களுக்கு தெரியும் . இது தொடர்பான விளக்கம் அடுத்த வாரம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.