ஹெல்மெட் கட்டாயம் என்பதில் சமரசத்துக்கே இடமில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்..
சென்னை : இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதில் சமரசத்துக்கே இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்க மறுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இணைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்த சங்கத் தலைவர் பால் கனகராஜ் சரியான விலையில் தரமான ஹெல்மெட் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கட்டாயம் ஹெல்மெட் அணிவதற்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், பாதுகாப்பு தொடர்புடையது என்பதால் ஹெல்மெட் அணிவதில் சமரசத்திற்கு இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்கப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கு பதில் அளித்த நீதிபதி யானை வாங்கினால் அங்குசம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்றார். மோட்டார் வாகன சட்டத்தில் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது கட்டாயமில்லை என வழக்கறிஞர்களே பேசுவது சரியானது அல்ல என்று கூறிய நீதிபதி ஹெல்மெட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளியாவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.