ஐஎஸ்க்கு ரூ. 5 லட்சம் நிதி - சென்னை ஆருணை ஒரு வாரம் கண்காணித்து கைது செய்த போலீஸ்
சென்னையைச் சேர்ந்த ஆருண் ஐஎஸ் அமைப்புக்கு ரூ. 5 லட்சம் நிதி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை: மண்ணடியைச் சேர்ந்த ஆருண் நேற்று ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக ரூ.5 லட்சம் பணம் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அம்மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இக்பால், 32 என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்து ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றனர்.
ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு நிதி
இவர் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்க நிதி திரட்டி அளித்து வந்ததாகவும், வேறு சில உதவிகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்பாலிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு கூட்டாளியாக செயல்பட்ட சென்னை மண்ணடியை சேர்ந்த ஆரூண் ரஷீத் என்பவரை பற்றி தெரிய வந்தது.
சென்னையில் கண்காணிப்பு
இக்பாலின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றையும் ஆராய்ந்த போது ஆருண் தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை வந்தனர்.
ஆருண் ரஷீத்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆருண் ரஷீத்தின் வீட்டை அவர்கள் கண்காணித்தனர். இக்பாலை போலவே ஆரூண் ரஷீத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டி அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
வங்கிக்கணக்குகள்
சென்னை பர்மா பஜாரில் ஆரூண் ரஷீத் சிடி விற்பனை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மொபைல் போன்கள் வாங்கியதற்கு பதிலாக ரூ.5 லட்சம் கொடுப்பது போல ஆரூண் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. அவருடைய வங்கி கணக்கு, அவருடைய நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை கடந்த ஒரு வாரமாக கண்காணித்தனர்.
அதிகாலையில் கைது
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்தனர். மேலும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அவரை கைது செய்து பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு முதலில் கொண்டு சென்றனர். பின்னர் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தீவிர விசாரணை
ஆருணிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மற்றும் ஒருவர் சென்னையில் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முகம்மது இக்பால் அளித்துள்ள வாக்குமூலத்தில் தன்னுடைய நண்பர்கள் மண்ணடியை சேர்ந்த கரீமுல்லா மற்றும் ரியே ஆகியோர் மூலம் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தலைமையகத்துக்கு நிதி அனுப்பி வந்ததாக கூறியிருக்கிறார்.
சிரியா செல்ல திட்டம்
சென்னை திருவல்லிக்கேணியில் செல்போன் வியாபாரம் செய்யும் தௌசீப் மூலமாகவும் நிதி அனுப்பியிருப்பதாக இக்பால் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஈரான் வழியாக சிரியா செல்ல இருந்ததாகவும், பெருந்தொகையை ஒரு ஏஜெண்ட் மூலம் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் இக்பால் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த பயணத்தை தான் ரத்து செய்துவிட்டதாகவும் இக்பால் கூறியுள்ளார்.
சென்னையில் நடமாட்டம்
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து வருகிறது. கேரளாவிலும், தமிழகத்திலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஐஎஸ் அமைப்பிற்கு நிதி அனுப்பிய தகவல் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.