ராம மோகன் ராவ் வீட்டில் 25 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை- விடிய விடிய விசாரணை
சென்னை: தமிழக தலைமைச்செயலர் ராம மோகன் ராவ், வீட்டில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதோடு, ராமமோகன் ராவிடமும், அவரது மகனிடம் விசாரணை நடத்தினர். இருவரும் இன்று கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும்.
ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் 92 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தது என்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

ராம மோகன் ராவ்
வங்கி அதிகாரிகள் மட்டும் அல்லாமல் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை வருமானவரித்துறை அதிகாரிகள் 25 மணி நேரம் சோதனை நடத்தினர். அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தலைமைச் செயலகம்
நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. வருமான வரி சோதனையால் பதற்றம் உருவாகவே ராம மோகன் ராவின் வீடு, தலைமைச் செயலகம், வருமான வரித்துறை அலுவலகத்தில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது.

விடிய விடிய விசாணை
கைப்பற்றப்பட்ட பணம், தங்கம், ஆவணங்களின் அடிப்படையில் ராவிடம் அதிகாரிகள் விடிய விடிய தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரது அலுவலகத்தில் உள்ள அறையில் நடத்திய சோதனையில், 40க்கும் மேற்பட்ட ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பணம், நகை பறிமுதல்
ராமமோகன் ராவின் வீடு, அலுவலகம், உறவினர் என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 48 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள், 7 கிலோ தங்கம் சிக்கியது. ராவ் வீட்டில் முதலில் 5 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின் கூடுதலாக 3 அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். இவர்கள் 8 பேரும் ராவிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்று ராம மோகன் ராவும், அவரது மகனும் இன்று கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎஸ் அதிகாரிகள்
ராம் மோகன் ராவ் மகனுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொழில் அடிப்படையில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.

விவேக்கிடம் தொடரும் விசாரணை
ராம மோகன் ராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நிறைவடைந்தது. சோதனையை முடித்துகொண்டு புறப்பட்ட அதிகாரிகள் ராம மோகன் ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக திருவான்மியூர் வீட்டிலிருந்து அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள விவேக்கின் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. மற்ற 8 இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications