"வர்தா" புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்: தமிழ்நாடு வெதர்மேன்
வர்தா புயல் நாளை சென்னையிலேயே கரையைக் கடக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் வானிலை நிபுணர் குழு கூறியுள்ளது.
சென்னை: மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் சென்னை அருகே நாளை வர்தா புயல் கரையைக் கடக்கும். 1994ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய புயல் தாக்கத்தை நாளை சென்னை சந்திக்கவுள்ளது. மிக பலத்த மழையும் பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனியார் வானிலை நிபுணர் குழு கணித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக மிக பலத்த மழைக்கு நாளை வாய்ப்புள்ளதாகவும் வெதர்மேன் குழு கூறியுள்ளது.
1994ம் ஆண்டுதான் சென்னையை மிகப் பலத்த காற்றுடன் கூடிய புயல் தாக்கியது. அதன் பிறகு அதேபோன்றதொரு தாக்கத்தை நாளை சென்னை சந்திக்கும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளது.
சென்னையில் புயல் கரையைக் கடக்கலாம்
சென்னை அருகே புயல் கரையைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அது சென்னையிலேயே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசும். கடந்த 1994ம் ஆண்டு இதுபோல பலத்த காற்று வீசியுள்ளது. கடந்த காலங்களில் ஜல் மற்றும் நிலம் புயல்கள் தாக்கியபோது கூட இந்த அளவுக்கு காற்று வீசியதில்லை.
1994 புயலின்போது
1994ம் ஆண்டு சென்னையை புயல் தாக்கியபோது மணிக்கு 116 மற்றும் 132 கிலோமீட்டர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசியது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு புயலின் கண் சென்னையைத் தாக்கிக் கடந்தது அதுவே கடைசி முறையாகும். தற்போதும் வர்தா புயலால் அதேபோன்றதொரு வாய்ப்பு உருவுாகியுள்ளது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு
22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு புயல் அபாயம் வந்துள்ளது. இந்தப் புயல் தாக்கம் காரணமாக இன்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். கன மழையாக இது இருக்கும். இந்த மழை போகப் போக பெரிதாகும். நாளை முழுவதும் மழை பெய்யும். நாளை இரவுக்கு மேல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்.
சென்னை மட்டுமல்ல
சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலுக்கு வெகு அருகில் உள்ள பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புண்டு. கடலுக்கு அருகே வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.
ஸ்கூலுக்குப் போகாதீங்க
இதுபோன்ற சமயத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பள்ளிகளுக்கு யாரும் போக வேண்டாம். அது பல சிரமங்களைத் தவிர்க்க உதவும். ஸ்கூல் வைத்தாலும் கூட போவதைத் தவிருங்கள் என்பதே எங்களது அட்வைஸ். வெளியில் வராமல் இருப்பதும் நல்லது. அலுவலகங்களுக்குச் செல்வதையும் தவிர்க்கலாம். வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்து கொள்வதே சாலச் சிறந்தது. முடிந்தவரை பாதுகாப்பாக இருந்து கொண்டு, டீ, காபியுடன் மழை மற்றும் புயலை சந்திக்கத் தயாராகுங்கள் என்று வெதர்மேன் கூறியுள்ளது.