"பல்லாவரத்தில்" சிக்கித் தவித்த சென்னை மக்கள்.. "மேடவாக்கத்தில்" வீடு தேடி அலைகிறார்கள்.. மழையால்!
சென்னை: மழை சென்னை மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினைகளை மட்டுமல்ல, வாடகை வீடு பிரச்சினைகளையும் ஒரு சேர பெரும் கவலையாக அளித்துவிட்டே ஓய்ந்துள்ளது.
ஒருபுறம் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் என்று அலுவலகத்திற்கு வசதியாக வீடு பார்த்து குடியேறிய மக்கள் செய்வதறியாமல் திகைக்கும் நிலையில், அபார்ட்மெண்களில் வசிப்பவர்களோ மழை படுத்திய பாட்டால் மேட்டுப் பகுதியில் வீடு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் முக்கால்வாசி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்பதே இந்த மழைக்குப் பின்னர்தான் தெரியவந்துள்ளது. மேடு, பள்ளம் பார்க்காம வீட்டைக் கட்டி வச்சீங்க...வாடகைக்கு வீடு பார்த்து வாழ்க்கையே போச்சுங்க..இதுதான் இன்றைய சென்னை நிலை...
வெள்ளக் காடான பகுதிகள்:
பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் பகுதிகள் வெள்ளத்தில் தவிக்கின்றன.
மேடான பகுதிக்கு அலைச்சல்:
தாம்பரத்தை அடுத்து புறநகர் பகுதியில் மாதம் ரூபாய் 3,500 என்ற அளவில் வாடகைக்கு இருந்தவர்கள் தாம்பரத்தை ஒட்டி மழை வெள்ளம் தேங்காத மேடான பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். அவர்கள் ஏற்கெனவே இருந்த வீட்டின் அளவுள்ள வீட்டுக்கு இப்போது ரூபாய் 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு வந்திருக்கிறார்கள்.
மறுபடி போவோமே:
புறநகர் பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் மழை விட்டதும் வீட்டின் முன் பகுதியில் சாலையை உயர்த்தி தருவதாக சொன்னதை அடுத்து, அங்கே மீண்டும் குறைந்த வாடகைக்கு போய்விட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.
தற்காலிக இடமாற்றம்:
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை இழக்க விரும்பாமலும், வியாபார வாய்ப்புகளை தொடர்ந்து தக்கவைக்கும் வகையிலும் சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு தாற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளனர்.
பயத்தில் தவிக்கும் மக்கள்:
இந்நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு கொண்டிருந்தாலும் ஏரி, ஆறு ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வந்த மக்கள்தான் பயத்தின் உச்சத்தில் உள்ளனர். தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததும், வீட்டை விட்டு வெளியேறி சென்றனர்.
தேடித்...தேடி அலைவோமே:
எனினும் மழை குறைந்தவுடன் மீண்டும் பழையபடி தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வாடகை வீடுகளில் கதவைத் திறந்து குடியேறிவிடாமல் இனியேனும் மக்கள் விழித்துக் கொண்டால் சரிதான்! இந்நிலையில் மீண்டும் அடித்துப், புரட்டிப் போடும் மழை என்கின்ற தகவல் வாடகை வீட்டு வாசிகள்தான் வயிற்றில் மீண்டும் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளார்கள்...அவ்வளவு மழை தண்ணீர் இருந்து அணைக்கை முடியாமல்!