சென்னையில் வன்முறையில் ஈடுபட மன்னார்குடி குண்டர்கள் குவிப்பு- ஆளுநர் உத்தரவால் போலீஸ் ரெய்டு
சசிகலாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை எனில் வன்முறையில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான குண்டர்கள் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சசிகலாவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் மிகப் பெரும் வன்முறையில் ஈடுபடுவதற்காக மன்னார்குடி குண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் நாற்காலியில் ஒருநாளாவது உட்கார்ந்துவிட வேண்டும் என வெறிபிடித்தவராக பேசிவருகிறார் சசிகலா. இனியும் பொறுமை காக்க முடியாது என தொண்டர்களிடம் சசிகலா இன்று பேசியுள்ளார்.
அதாவது தமக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் வன்முறையில் இறங்குவோம் என மறைமுகமாக சசிகலா பேசியுள்ளார். ஏற்கனவே சசிகலா உறவினர்கள், மன்னார்குடி குண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது சசிகலாவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இதனால் சென்னை மெரினாவில் நிகழ்ந்தது போல போலீசார் துணையுடன் திடீரென பெரும் வன்முறையை மன்னார்குடி கும்பல் நிகழ்த்தக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் சோத்னனை நடத்த ஆளுநர் வித்யாசகர் ராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வேறுவழியின்றி சோதனை நடத்தி அறிக்கை தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது அனைத்து லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.