அந்நியன் படத்தில் வருவது மாதிரி உயிரிழந்த வேளச்சேரி தம்பதி... ரூ.4 லட்சம் ஜெ. நிவாரணம்
சென்னை: விக்ரம் நடித்த அந்நியன் திரைபடத்தில் மழை பெய்து தேங்கிய வெள்ளநீரில் மின்கம்பி அறுந்து விழுந்து அதில் சிக்கி சிறுமி ஒருவர் மரணமடைவார். படத்தின் முக்கிய கதையே அதில் இருந்துதான் தொடங்கும். அதே பாணியில் சென்னை வேளச்சேரியில் காற்றோடு பெய்த கனமழைக்கு துருபிடித்த மின்சார கம்பி அறுந்து விழுந்து கருணாகரன், அவரது மனைவி சுதா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணம் இரண்டு பிஞ்சு குழந்தைகளை அநாதைகளாக்கி விட்டது.
"மழை லேசா நின்னுச்சா நாங்க எல்லோரும் கடைக்குப் போனோம்... மளிகை சாமான் வாங்கிட்டு தோசை சுட மாவு வாங்க போனோம். அப்போ காத்துல கம்பி அறுந்து விழுந்துச்சு.... வண்டியில இருந்து அம்மா தள்ளிவிட்டாங்க... நாங்க கீழே விழுந்துட்டோம். அம்மா முடி தண்ணியில பட்டுச்சு... அப்பாவோட துண்டும் தண்ணியல பட்டுச்சு... ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரிருக்கு எடுத்துட்டு போயிருக்காங்க என்று நடந்த சம்பவத்தை தனது மழலைக்குரலில் விவரிக்கிறாள் ஆறு வயது சிறுமி ஆர்த்தி ஸ்ரீ. பெற்றோர்கள் இறந்து போனது கூட தெரியாமல் இருக்கின்றனர் ஆர்த்திஸ்ரீயும், நித்யஸ்ரீயும்.
அலட்சியத்தினால் பலியான உயிர்கள்
கடந்த இருதினங்களுக்கு முன்பே அதே இடத்தில் மின்சாரம் தாக்கி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. அதுபற்றி அந்த பகுதிவாசிகள் புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு அப்பாவிகளின் உயிர் போனபின்னர்தான் அவசரம் அவசரமாக மின்கம்பியை மாற்றியுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான நால்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர் மின்வாரிய அதிகாரிகள். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு அப்பாவிகளின் உயிர் பலியாகியுள்ளது. பிஞ்சுக்குழந்தைகள் இருவர் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் நிதி உதவி
சென்னை வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் அறிக்கை
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5வது தெருவில், 22.11.2015 அன்று மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6-வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
ரூ.4 லட்சம் நிதி
மழை மற்றும் காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.