மழை பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
மழை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம்; விடுமுறை கிடையாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். மழை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மழை நீர் குளம் போல காட்சி அளித்துவருகிறது.

சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர்கள் அவ்வை சண்முகம் சாலையில் இறங்கி மழை நீரை அகற்றும் பணியைப் பார்வையிட்டார். அப்போது, ஆணையரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பற்றி தேவையற்ற வதந்தி பரப்ப வேண்டாம் என்று கூறினார். தேவையற்ற வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில சுரங்கப்பாதையில் மட்டும் நீர் எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம்; விடுமுறை கிடையாது என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications