சென்னையில் மழை இன்று கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும்... சொல்கிறார் வெதர்மேன்
மழை இன்று சில மணி நேரம் ஓய்வெடுக்கும் என்றும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து மழை படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விவரமாக எழுதியிருக்கும் அவர் இன்று மழை கண்டிப்பாக நிற்கும் என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் உயரமாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த 8 மணி நேரமாக சென்னையின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையை ஒரே இரவில் அடியோடு புரட்டிப் போட்ட இந்த பேய் மழை இன்று காலையில் இருந்து படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்து இருக்கிறார். அது குறித்து அவர் தனது தமிழ்நாடு வெதர் மேன் பேஸ்புக் பக்கத்தில் விவரமாக எழுதி இருக்கிறார்.
அதில் "சென்னையில் மோசமாக பெய்த மழை கடைசியாக முடிவுக்கு வந்துவிட்டது. ராடார் விவரங்களின் படி சென்னையை சூழ்ந்து இருந்த அபாயம் இப்போதைக்கு விலகி இருக்கிறது. சென்னையை சூழ்ந்து இருந்த மேகங்கள் எல்லாம் தூரமாக நகர்ந்து இருக்கிறது. லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இனி அச்சப்பட தேவை இல்லை'' என்று கூறியிருக்கிறார்.
மேலும்அவர் தனது அந்த பதிவில் ''மீண்டும் சென்னையை மழை மேகம் சூழ்ந்தால் உடனடியாக தெரிவிக்கிறேன். இப்போதைக்கு எந்த பாதிப்பும் சென்னைக்கு இல்லை'' என்று எழுதி இருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் சென்னை வானிலை மையம் தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications