பொதுமன்னிப்பு தாங்க... ரவுடி வியாசர்பாடி நாகேந்திரன் மனைவி கதறல்
சென்னையை கலக்கிய வியாசர்பாடி ரவுடி நாகேந்திரன் பொதுமன்னிப்பு கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளாராம்.
சென்னை: தமது கணவர் ரவுடி வியாசர்பாடி நாகேந்திரனுக்கு பொதுமன்னிப்பு தர வேண்டும் என அவரது மனைவி விசாலாட்சி கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு கருணை மனுவை விண்ணப்பித்திருக்கிறார் ஆயுள் தண்டனை சிறைவாசி வியாசர்பாடி நாகேந்திரன். ' கல்லீரல் சிகிச்சைக்காக நீதிமன்றம் தலையிட்டதால்தான் சிகிச்சை பெற முடிந்தது. எனக்கு பொதுமன்னிப்பை அரசு வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் நாகேந்திரன்.
வடசென்னை ரவுடியிசத்தைப் பொறுத்தவரையில் வியாசர்பாடி நாகேந்திரனின் பெயரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாது. அந்தளவுக்கு கொலைகளையும் கட்டப் பஞ்சாயத்துக்களையும் ஆறாக ஓடச் செய்தவர்.

வடசென்னையை கலக்கிய நாகேந்திரன்
ரியல் எஸ்டேட் தகராறாக இருந்தாலும் வணிகக் கடைகளில் வசூலாக இருந்தாலும் நாகேந்திரன் சொல்வதுதான் வேதவாக்கு. இந்நிலையில், ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், கடந்த ஒரு மாத காலமாக சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நாகேந்திரனுக்கு அறுவை சிகிச்சை
கல்லீரல் பழுது காரணமாக, மாற்று கல்லீரல் பொருத்துவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார். அவர் சிகிச்சை பெறும் போட்டோக்களை வெளியிட்டு, அரசின் கருணைப் பார்வைக்காக காத்திருக்கிறார்.

உடல்நலம் தேறிய நாகேந்திரன்
இதுபற்றி நம்மிடம் பேசிய நாகேந்திரன் உதவியாளர்கள், முன்பு போல அவர் எந்த சம்பவத்திலும் ஈடுபடுவது கிடையாது. கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது நாகேந்திரன்தான் எனத் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவோடுதான் மருத்துவமனையில் அனுமதித்தோம். இப்போது நன்றாகவே தேறிவிட்டார்" என்கின்றனர்.

பொதுமன்னிப்பு கேட்கும் மனைவி
இந்நிலையில், நாகேந்திரனுக்கு கருணை அளிக்குமாறு முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருக்கிறார் அவரது மனைவி விசாலாட்சி. இதுபற்றிப் பேசும் அவர், " கடந்த மூன்று வருடங்களாகவே உடல் நலமில்லாமல் அவர் இருக்கிறார். என்னையும் 3 குழந்தைகளையும் அவருடைய அம்மாதான் பராமரித்து வந்தார். இப்போது அவரும் இறந்துவிட்டார். எங்களைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லை. என்னுடைய மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்துவிட்டேன். அவரும் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். பல வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவர் மீது அரசு கருணை காட்ட வேண்டும். சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும்போது அவரையும் விடுதலை செய்ய வேண்டும். பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்" என்றார் உருக்கமாக.












Click it and Unblock the Notifications