சென்னை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தீவிரவாதிகள் குறி: ரகசிய கேமராக்கள் பொருத்த போலீஸ் முடிவு
சென்னை: சென்னையில் ஷாப்பிங் மால்கள், அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் முக்கிய குடியிருப்புகளில் பாதுகாப்பு கருவிகளையும், ரகசிய கேமராக்களை பொருத்துவதோடு அந்த கருவிகளை போலீஸ் கண்ட்ரோல் ரூமுடன் இணைக்கவும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆபரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை நடத்த சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஆண்டுதோறும் கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேசன் ஆம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2009ம் ஆண்டு முதல் தற்போது ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
சென்னையில் 250 இடங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாகவும், இதில் நகரின் முக்கிய பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளிலும் ஆமரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை நடத்த குடியிருப்பாளர்களுடன் சென்னை மாநாகர காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.கமாண்டோ படையினருடன் தேசிய பாதுகாப்பு படையினரும் இணைந்து இந்த ஆபரேசன் ஆம்லா ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆபரேசன் ஆம்லா ஒத்திகை ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.
கமாண்டோ படை பாதுகாப்பு
சென்னையில் முக்கிய குடியிருப்புகளில் பாதுகாப்பு கருவிகளையும், ரகசிய கேமராக்களை பொருத்துவதோடு அந்த கருவிகளை போலீஸ் கண்ட்ரோல் ரூமுடன் இணைக்கவும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறும் சமயங்களில் உடனடியாக இதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட உள்ளது. 6 மாதங்களுக்கு ஒருமுறை குடியிருப்பு பகுதிகளில் ஆபரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்தும் குடியிருப்பாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சென்னையில் 250 இடங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளனர். இதனையடுத்தே அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தயார் நிலையில் வீரர்கள்
சென்னை நகருக்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துவிட்டால், அடுத்தகணமே, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 400 கமாண்டோ வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து அதி நவீன பயிற்சிகளும் இந்த கமாண்டோ படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு படைவீரர்களும் சென்னை அருகே தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.