மெரினா போரட்டத்தில் நடந்தது என்ன? காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கர் விளக்கம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மெரினாவில் நடந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் தடியடி நடத்தவில்லை என சென்னை பெருநகர தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க மெரினாவில் பல லட்சம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து மெரினா போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றது. முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கி கூறினோம். பிரதமர் உறுதி அளித்ததைத் தொடர்ந்தும் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை.
பின்னர் வாடிவாசல் திறக்கும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஜனவரி 21 ஆம் தேதி போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏராளமான மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஜனவரி 22 ஆம் தேதி அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.
ஆனால், ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற உறுதியை மாணவர்கள் ஏற்றாலும் ஒரு சில இயக்கங்கள் மட்டும் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு சில பிரிவினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெறவிடாமல் சிலர் தடுத்தனர். இதனிடையே நடுக்குப்பம் பகுதியில் இருந்து வந்த சிலர் தடியடி நடத்தியதாக வதந்திகளை பரப்பினர். பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசினர். இதனால் வன்முறை வெடித்தது.
குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில் சமூக விரோதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜனவரி 23 ஆம் தேதி காலை போராட்டக்காரர்களை அமைதியாக கலைக்கும் நோக்கத்துடன் போலீசார் அங்கு கூடினோம்.
போராட்டக்காரர்கள் மேலும் வராமல் தடுக்கு சோதனை சாவடி அமைத்து தடுத்தோம். போராட்டத்தின் போது காவலர்களே அதிக அளவில் காயம் அடைந்தனர். காவலர்கள் யாரிடமும் லத்தி கொடுக்கப்படவில்லை. மெரினா போராட்டக்காரர்கள் மீது தடியடி எதுவும் நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.