சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடராவிட்டால் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தமிழக ஏரிகளில் போதுமான நீர் இருப்பு இல்லை என்றும் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்றும் செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர்:- செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளின் மூலம் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏரிகளை ஒட்டிய பகுதிகளில் 40 செ.மீ. வரை வடகிழக்குப் பருவ மழை பெய்துள்ளது. இருந்தாலும் ஏரிகளின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.
இப்போது உள்ள விவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 1.16 டி.எம்.சி. நீரும், புழல் ஏரியில் 1.37 டி.எம்.சி. நீரும், பூண்டியில் 0.22 டி.எம்.சி. நீரும் மட்டுமே கையிருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் தரையை நனைக்கும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தமாக நான்கு ஏரிகளிலும் சேர்த்து 2.80 டி.எம்.சி.,க்கும் குறைவாகத்தான் நீர் இருப்பு உள்ளது.
சென்னை மாநகர மக்களின் ஒரு மாத குடிநீர்த் தேவை சுமார் ஒரு டி.எம்.சி., என்றால், மூன்று மாதத் தேவைக்கும் குறைவான நீர் இருப்புதான் உள்ளது.
ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர்வரத்தும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவமழை தொடராவிட்டால், மூன்று மாதத்திற்குப் பின் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. ஆனால் இந்தச் செய்தியை நான் தெரிவித்தால், "இவருக்கு என்ன தெரியும்" என்று கேட்பவர்கள் அல்லவா ஆட்சியிலே இருக்கிறார்கள்!
இவ்வாறு கருணாநிதி அதில் தெரிவித்துள்ளார்.