கடலூர் சப்- இன்ஸ்பெக்டர் கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஜெயலலிதா பதில்
சட்டபேரவையில் இன்று கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர், "கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் 22.7.2014 அன்று சுமார் 23.45 மணியளவில் கோவிந்தசாமி என்பவர் ஆஜராகி, தனது மனைவியின் சகோதரி மகன் கணேசன் என்பவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்ததாகவும்; அவர் கிள்ளை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போது அவருக்கும் சிதம்பரம், அம்பலத்தாடி குப்பத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்த வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும்; வனிதா, கணேசனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவனை விவாகரத்து செய்ததாகவும்;
கணேசனுக்கு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால், கடந்த 9.7.2014 அன்று உறவு பெண்ணான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும்; இதனால் ஆத்திரமுற்ற வனிதா கணேசனை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும்; சம்பவத்தன்று இரவு சத்யா தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கணேசனை தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.
அதை அடுத்து, தனது மகனுடன் கணேசன் தங்கியிருந்த வீட்டிற்கு தான் சென்றதாகவும்; அப்போது வனிதா வீட்டைப் பூட்டிவிட்டு அவசர அவசரமாக சென்றதாகவும்; ஜன்னல் வழியாக பார்த்த போது கணேசன் கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும்; பின்னர் தாங்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும்; உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும்; வனிதா அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு, வனிதாவை தேடிச் சென்று, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் கைது செய்து விசாரித்த போது, அவர், கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், தனது கணவரிடமிருந்து தான் விவாகரத்து பெற்றதாகவும், பின்னர் கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து, தனது வாழ்க்கையைக் கெடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். காவல் துறையினர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் கைப்பற்றினர்.
வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" இவ்வாறு முதல்வர் கூறினார்.