விவசாயிகளுக்காக ஒருநாள் கூட உட்கார முடியாத சினிமா கோஷ்டிகள்! 4 மணிநேர அரட்டை கச்சேரியுடன் ஓட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தி வரும் அறவழி போராட்டம் இன்று தொடங்கியது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் நடத்திய போராட்டம் 3 மணி நேரத்தில் முடிவடைந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட இரு பிரச்சினைகளுக்காகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் திரையுலகினர் திரண்டனர். அவர்களின் அறவழிப்போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொடங்கிவைத்தார்.
முழக்கம்
இதில் நடிகர்கள் விஜய், சிவக்குமார், கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக ஸ்டென்ட் கலைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி, கமல்
இந்த போராட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனினும் ரஜினி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கமலும், ரஜினியும் நடிகர் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
உரிமைகள் கிடைக்க வேண்டும்
இந்நிலையில் இந்த போராட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் தேவைகளை பாகிக்கும் எந்த விஷயத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது. காவிரி நதி நீரில் தமிழக விவசாயிகளின் உரிமைகள் கிடைக்க வேண்டும்.
இழப்பீடு தர வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது , தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்துவது, ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அஞ்ச மாட்டோம்
நடிகர் சத்யராஜ் பேசுகையில் மக்களின் அரசு மக்கள் உணர்வை மதிக்க வேண்டும். சூழலை கெடுத்து கொழிக்கும் ஆலைகள் வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும் ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம். குரல் கொடுக்க தைரியமிருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் ஒளிந்து கொள்ளுங்கள் என்று சத்யராஜ் வீர முழக்கமிட்டார்.
போராட்டம் முடிந்தது
இந்த போராட்டத்துக்கு காவல் துறையினர் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி கொடுத்ததை அடுத்து போராட்டம் 1 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் கலைந்து சென்றனர்.