மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ. 1970.. தந்தை இறந்ததால் கொரோனா நிதிக்கு அனுப்பிய மாணவி!
கோவில்பட்டி: தனது தந்தையை இழந்த நிலையிலும் அவரது மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ 1970-ஐ முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமி ரிதானா முதல்வருக்கு உருக்கமான கடிதத்தையும் எழுதியுள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் மதிவிண்டி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். இது போல் பல குழந்தைகள் நிதி அளித்து வருகிறார்கள்.

கோவில்பட்டி
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ்- அமுதா தம்பதியின் மகள் ரிதானா. இவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சேமிக்கும் பழக்கம்
தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து தனக்கு பிடித்த பொருட்களை வாங்குவது அல்லது தன்னுடன் படிக்கும் சகமாணவிகளுக்கு அவசர தேவைக்கு உதவுவது என ரிதானா செய்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகராஜுக்கு கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது மருத்துவ செலவிற்கு தான் வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார்.

மாரடைப்பால் இறந்த தந்தை
ஆனால் நாகராஜ் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்துவிட்டார். இதனால் ரிதானா அந்த பணத்தை அப்படியே வைத்திருந்தார். தற்போது ரூ 1970 ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எம்பி கனிமொழியிடம் இந்த பணத்தை வழங்கிய ரிதானா அவரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தார்.

யாரும் இழக்கக் கூடாது
அந்த கடிதத்தில் நான் அப்பாவை இழந்தது போல் எந்த குழந்தையும் அப்பா, அம்மாவை இழந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். நிதி வழங்கிய சிறுமிக்கு கனிமொழி எம்பியும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜும் பாராட்டியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications