'வெற்றி விழாவில் வீர வாள் கொடுங்க, வாங்கிக்கறேன்' - அமீரிடம் சொன்ன முதல்வர்
சென்னை: வெற்றி விழா நடத்தி, வீர வாள் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன் என தன்னிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாக இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்சி அமைப்பினர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
முதல்வரைச் சந்தித்த பின் ‘பெப்சி' தலைவர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், "பெப்சி தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வரைச் சந்தித்தோம். எங்கள் குறைகளை தாய் உள்ளத்தோடு கூர்ந்து கேட்டார்.
சம்பள உயர்வு, படப்பிடிப்பு தளங்களில் உள்ள பிரச்சினைகள், சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை எடுத்து கூறினோம். அவற்றை படித்து பார்த்து என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன் என்றார்.
எங்கள் கோரிக்கை வெற்றி விழாவை கலை நிகழ்ச்சியுடன் மட்டுமல்லாது, பெரிய விழாவாக நாங்கள் நடத்த உள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு பள்ளிக் கரணையில் 85 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அம்மாதான். அது சதுப்பு நிலம் என்பதால் வேறு இடம் கேட்டிருக்கிறோம்.
‘பெப்சி'யில் அங்கம் வகிக்கும் 23 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினை தீர்க்கப்படும்.
நாங்கள் அம்மாவை சந்தித்தபோது அவருக்கு வீரவாள் பரிசாக கொடுத்தோம். அதற்கு அவர் இப்போது வேண்டாம். வெற்றி விழா நடத்தும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்," என்றார்.