முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை... அசால்ட் எடப்பாடி பழனிச்சாமி - அதிர்ச்சியில் எம்எல்ஏக்கள்
ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவது அவருக்கு எதிராக குடைச்சல் கொடுக்கும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தனக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்களை எச்சரிக்கும் விதமாக பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி கலைந்து முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை. எனக்கு நஷ்டமில்லை என்று அவர் பேசி வருவது பல எம்எல்ஏக்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு எம்எல்ஏவையும் சமாளித்து திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது. இதைத்தான் கடந்த இரண்டு மாதங்களாகச் செய்து வந்தார். செவ்வாய்கிழமை முதல் தினந்தோறும் துறை வாரியாக ஒவ்வொரு அமைச்சருடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல் நாளில், தொழில் துறை அமைச்சர் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிய அறிவிப்புகள் குறித்தும் முடிவு செய்யப் பட இருக்கிறது.
இப்போது பல எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு நச்சரித்து வருவதால், ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்.
எம்எல்ஏக்கள் நச்சரிப்பு
முதல்வர் எடப்பாடியைச் சந்திக்கும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலரும், பலவிதமான நிபந்தனைகளையும், தேவைகளையும் கோரிக்கைகளாக முன்வைத்து வருகின்றனர். கூவத்தூர் ரிசார்ட்டில் கொடுத்த வாக்குறுதிகள், பணம் குறித்தும் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.
தலித் எம்எல்ஏக்கள்
அதிமுகவின் தலித் எம்.எல்.ஏக்கள் மட்டும் சென்னையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இதில், ‘அதிமுக-வில் 31 தலித் எம்.எல்.ஏக்களை மக்கள் ஜெயிக்க வைத்துள்ளனர். ஆனால், அமைச்சரவையில் மூன்று அமைச்சர்கள் என்ற மிகக் குறைவான பிரதிநிதித்துவமே தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தலித்துகளைவிட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் மற்ற பிரிவினருக்கு அமைச்சரவையில் அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்று விவாதித்து இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
செந்தில் பாலாஜி
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையே அமைச்சர் பதவி பற்றிய ஆலோசனைதான். நாங்களும் எப்போ அமைச்சராவது என்று கேட்டுள்ளனர் பல மாஜி அமைச்சர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி டென்சன்
இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டென்சனுக்கு ஆளாக்கியுள்ளது. தனக்கு மிரட்டல் விடும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் பேசி வருகிறாராம். ஆட்சியே கலைஞ்சாலும் பரவாயில்லை இனி யாருடைய நாட்டாமைக்கும் நான் தலையசைக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.
ஜாக்கிரதை
தேர்தல் வந்தாலும் நான் மீண்டும் போட்டியிட்டு ஜெயிப்பேன். ஆனா நீங்க... உங்களால முடியுமா? அதனால் பொன் முட்டையிடுற வாத்தை அறுக்க நினைக்காதீங்க என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆடிப்போன எம்எல்ஏக்கள்
எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து கொண்டே அவருக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வரும் எம்எல்ஏக்கள் பலரும் இப்போது ஆடிப்போயிருக்கிறார்களாம். முதலுக்கே மோசமாயிருமோ? ஆட்சியில்லைன்னா எம்எல்ஏ ஆக செலவழிச்ச பணத்தை எடுக்க முடியாதேப்பா என்று நினைத்து அடுத்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்களாம்.