பிளாஸ்டிக் இல்லா தமிழகம்.. சூர்யா, கார்த்தி விளம்பர தூதர்கள்.. அமைச்சர்களுக்கு இனி காகித கோப்புதான்
Recommended Video
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இன்றைய தினம், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அதை தடை செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால், பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகிறோம். தூய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் மாற்று பொருட்களை நாங்கள் இங்கு, காட்சிப்படுத்தியுள்ளோம். இதை பயன்படுத்தினால் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு, ஒத்துழைக்க வேண்டும்.
இதற்கான விளம்பர தூதராக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் செயல்படுவார்கள். சூட்டிங்கில் இருப்பதால் மற்ற மூவரும் இன்று வரமுடியவில்லை. விவேக் மட்டும் வந்துள்ளார்.
அரசு கோப்புகளில் வரும் மேலுரையை (ஃபோல்டர்கள்) இனிமேல் காகிதத்தில்தான் பயன்படுத்துவோம். இன்று முதலே அனைத்து அமைச்சர்களும் காகித மேலுரை கொண்ட கோப்புகளையே பயன்படுத்த உள்ளனர். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.