சசிகலாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இல்லாமல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!
சசிகலாவை நீக்குவது தொடர்பாக பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து எம்எல்ஏ-க்கள், எம்பிக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சசிகலாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் ஏதும் இல்லை. ஆனால் தினகரன் உத்தரவுகள் செல்லாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்புக்கு முன்னதாக ஓபிஎஸ் அணியின் கோரிக்கையான சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுவதாக இணைப்பு நிகழ்ச்சியின்போது உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் தினகரனும் அன்றாடம் மூத்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து வருகிறார்.
பொதுக்குழு எப்போது?
இதனால் இரட்டை இலை சின்னத்தை பெறுவது, தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெறுவது, அதிமுகவை வழிநடத்தும் குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த பொதுக் குழுவை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் கூட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
4 தீர்மானங்கள்
அதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தினகரன் உத்தரவுகள் செல்லாது, பொதுக் குழுவை விரைவில் கூட்டுவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் சசிகலாவுக்கு எதிராக எந்தவித கடுமையான வார்த்தைகளோ அவரை நீக்குவது என்பதோ இடம்பெறவில்லை.
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர்
சசிகலா, தினகரன் குடும்பத்தினர் கைப்பற்றி வைத்துள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஆகிய ஊடகங்களை கைப்பற்றுவது என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய ஆலோசனைகள்
இதில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
40 பேர் புறக்கணிப்பு
இதில் எம்எல்ஏ-க்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் என 70 பேர் கலந்து கொண்டனர். எனினும் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.