தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை.. விரைவில் ஒப்புதல் வழங்குங்கள்.. மோடியிடம் எடப்பாடி கோரிக்கை
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
டெல்லி: வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை மனுக்களை அளித்து விட்டு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து கமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இலங்கையில் பிடிபட்டுள்ள 125 படகுகளையும், 11 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி மானியம் வழங்க கேட்டுக் கொண்டுள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம்,காவிரி முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்தால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.