எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது, வெற்றிடம் இல்லை: ரஜினிக்கு முதல்வர் பதில்
சென்னை: தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடப்பதாகவும், வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர். ஆட்சி நடக்கும் என்றும் தற்போது தமிழகத்தில் தலைமை இல்லாமல் வெற்றிடம் இருப்பதாகவும் புதுக்கட்சி துவங்கப்போகும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பெரியார். அவரின் சிலையை அகற்றுவோம், சேதப்படுத்துவோம் என்று கூறுவது கண்டனத்திற்குரியது. அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலைகளை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது. அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி தான். எம்.ஜி.ஆர். துவங்கிய இயக்கத்தை அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்மை இயக்கமாக கொண்டு வர பாடுபட்டார்.
கடைசி வரை மக்கள் பணியாற்றிய இரண்டு தலைவர்களின் கட்சி தான் அதிமுக. அதனால் இங்கு வெற்றிடம் என்பதே இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ அதே வழியில் தான் நாங்களும் ஆட்சி செய்கிறோம். தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications