அரசியல் சூட்டுக்கு குட்டி பிரேக்.. மலர் ஷோவை தொடங்கி வைக்க ஊட்டி போகும் எடப்பாடியார்!
உதகையில் மலர்கண்காட்சியை தொடக்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஊட்டி செல்கிறார்.
சென்னை: ஊட்டியில் 3 நாட்கள் நடைபெற உள்ள மலர்கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்க வைக்க உள்ளார். இதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து ஊட்டி செல்கிறார்.
கோடைகாலத்தில் சீசனை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ரம்மியமான சூழலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள், கோடை விழாவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் அள்ளிச் செல்கின்றனர்.

அரசு தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி மற்றும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ரோஜா கண்காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் ரசித்தனர்.

கோடை விழா
இந்த ஆண்டுக்கான கோடை விழா அங்கு தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 121-வது மலர் கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19ஆம் தேதி துவங்கி மூன்று நாள் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
மலர் கண்காட்சியை தொடக்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து அவர் ஊட்டி செல்ல உள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்
மே 19ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி மே 21ஆம் தேதி நிறைவடைகிறது. நிறைவு விழாவில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் பங்கேற்கிறார். உதகையில் 1896ஆம் ஆண்டு முதல் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications