காந்தி நினைவுநாள் - ஒபிஎஸ் தலைமையில் ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 69வது நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைமை செயலகத்தில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 144 தடை உத்தரவு உள்ளதால் மெரினா கடற்கரையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி வாசிக்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி சட்டசபை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஒ.பன்னீர் செல்வம் வாசித்தார். அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது காந்தி நினைவு தினத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் எதிர்கட்சியினர் பங்கேற்க ஆர்வம் காட்டமாட்டார்கள். இப்போது ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் எதிர்கட்சியினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.