முதல்வர் வேட்பாளர் பேச்சுக்கே இடமில்லை- கூட்டணியில் குழப்பமும் இல்லை... வைகோ விளக்கம்
கிருஷ்ணகிரி: மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை...இது தொடர்பாக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் வைகோ முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று ஒருதரப்பும் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பும் வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனால் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் மண்டல அளவிலான ஆலோச னைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
குழப்பமே இல்லை
மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்பதே கிடையாது. எந்த குழப்பத்துக்கும் இடம் கிடையாது.
முதல்வர் வேட்பாளர் இல்லை
தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்கள்தான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை முதல்வர் வேட்பாளர் இவர்தான் எனக்கூறி தேர்தல் நடந்தது கிடையாது.
நான் ஒருங்கிணைப்பாளரே...
முதல்வர் வேட்பாளர் என்கிற எண்ணம் கிடையாது, அது தவறும் கூட. 4 கட்சிகளின் முடிவின்படிதான் நான் மக்கள் நலக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.
திட்டவட்டம்
தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.