புதுச்சேரி : வெள்ள சேதத்தை நேரில் பார்த்த ரங்கசாமி: அனைவருக்கும் ரூ. 4000 நிவாரணம் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தை போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு வார காலமாக பெய்து வரும், கன மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மரங்கள் விழுந்துள்ளன. சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பாலங்கள், தடுப்பணைகள் சேதமடைந்துள்ளது. மழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தினக்கூலி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
புதுச்சேரி மாநில சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மழை சேதத்தை கணக்கிட்டு, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மழையால் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி நிவாரணத்தை முற்றிலும் சேதம் அடைந்த கல்வீடுகளுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் குடும் அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் குடிசை வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ. 182.45 கோடி நிவாரணம் கோரி ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 200 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.