சசிகுமார் கொலை எதிரொலி.. கோவை கலவரத்திற்கு காரணமான 108 இந்து முன்ணியினர் கைது
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையால் நேற்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களை எரித்து கடைகளை கல்வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக 108பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இயல்புநிலை திரும்பியுள்ளது, காலை முதல் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்து முன்னணியின் கோவை மாநகர மக்கள் செய்தித்தொடர்பாளர் சசிகுமார். இவர் வியாழக்கிழமையன்று இரவு 11 மணி அளவில் சுப்பிரமணிபாளையத்தில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சசிகுமாரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அறிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்த சசிகுமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணியினர் தனியார் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த சசிகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. சசிகுமாரின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஐனதா கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
சசிகுமார் கொல்லப்பட்ட தகவல் பரவிய உடன் கோவை முழுவதும் கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில இடங்களில் திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியம் என்பவர் காயம் அடைந்தார். போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
சசிகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒரு வேனில் ஊர்வலமாக கவுண்டம்பாளையத்துக்கு புறப்பட்டது. அப்போது வன்முறை ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பல்வேறு பகுதிகளில் ஊர்வலத்தினர் கல்வீசி கடைகளை அடித்து நொறுக்கினார்கள். போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.
சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டன. மோட்டார்பைக்குகள், ஆட்டோக்கள் எரிக்கப்பட்டதை பார்த்து அப்பாவி பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். பலத்த கலவரத்துக்கு இடையே சசிகுமாரின் உடல் தகனம் துடியலூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கோவையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 108பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் இயல்புநிலை திரும்பியுள்ளது, காலை முதல் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.