ராஜினாமா செய்தார் கோவை ஸ்மார்ட் சிட்டி சிஇஓ.. பின்னணியில் அரசியல்.. பரபரப்பு சர்ச்சை!
கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி, அரசியல் நெருக்கடிகளால், ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி சுகன்யா, அரசியல் கட்சி பிரமுகர்கள் கொடுத்த மிரட்டல் நெருக்கடிகளால், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கோவை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராஜூவின் மகள் சுகன்யா கடந்த 11ம் தேதி நியமிக்கப்பட்டார். இது பல்வேறு சர்ச்சைகளை மாவட்ட அரசியலில் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுகன்யா நேற்று தனது, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் கொடுத்தார். அதை மாநகராட்சி கமிஷனர் ஏற்றுக்கொண்டார்.
பல ஆயிரம் கோடி ருபாய்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் நிலையில் அரசியல் காரணங்களுக்காக அனுபவம் இல்லாத ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
விதிமீறல் காரணம்
மேலும் சுகன்யா நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக கூறி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் நேர்காணலில் கலந்து கொண்ட 17 பேரில் சுகன்யா மட்டுமே தகுதி உள்ளவராக இருந்ததாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முறையாக நேர்காணல்
அதேநேரம் சுகன்யாவை பணி நீக்கம் செய்து, முறையாக நேர்காணல் நடத்த வேண்டும் என்று கூறி அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டங்களை நடத்தினர். இதனால் கோவை மாநகராட்சி எப்போதும் பரபரப்பில் இருந்தது.
சுகன்யா மன உளைச்சல்
இதனால் சுகன்யா கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையே தனது ராஜினாமா கடிதத்திலும் அவர் தெரிவித்துள்ளார்.
அபாண்ட குற்றச்சாட்டு
தகுதி இருந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுவதாக கூறிய அவர் தேவையில்லாத விமர்சனங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே இப்பணியில் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என ராஜினாமா கடிதத்தில் கூறி உள்ளார்.
ராஜினாமா ஏற்பு
சுகன்யாவின் ராஜினாமா கோவை ஸ்மார்ட்டி சிட்டி நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை மாநகராட்சி கமிஷனர் கூடுதலாக அப்பணிகளை கவனித்துக் கொள்வார் என கோவை மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.