உடைந்தது தமிழக காங்கிரஸ்! புதுக் கட்சி தொடங்கினார் வாசன்! திருச்சியில் பெயர்- கொடி அறிவிப்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை விரைவில் நடைபெறும் திருச்சி மாவட்டத்தில் அறிவிப்போம் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டிருந்தார் ஜி.கே.வாசன். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கவும் காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. அத்துடன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த வாசன், தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபோட்டுப் பார்த்தார்.
பிரச்சனைக்கு காரணமான மகேந்திரன்
ஆனால் காங்கிரஸ் மேலிடமே தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாசனின் தீவிர ஆதரவாளர் ஞானதேசிகனுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. ஜி.கே.வாசனின் சொந்த பகுதியான தஞ்சாவூரில் அவருக்குப் போட்டியாக மகேந்திரன் என்பவரை ராகுல் காந்தி களம் இறக்கினார்.
மகேந்திரனுக்கு திடீரென காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியும் கொடுக்கப்பட்டது. இதை முற்றிலும் விரும்பாத வாசன், ஞானதேசிகனை டெல்லிக்கு அனுப்பி பஞ்சாயத்து பேசினார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஞானதேசிகனின் கோரிக்கையை நிராகரித்தது.
உறுப்பினர் அட்டையில் காமராஜர்- மூப்பனார் படம்
அத்துடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படத்தைத் தவிர வேறு எவரது படமும் இருக்கக் கூடாது என்பதிலும் காங்கிரஸ் மேலிடம் கண்டிப்பு காட்டியது. ஆனால் ஞானதேசிகனோ, காமராஜர் மற்றும் மூப்பனார் படத்தை போட்டுத்தான் உறுப்பினர் அட்டை அடித்துள்ளோம். அதைத்தான் வழங்குவோம் என்று அடம்பிடித்தார்.
சோனியா கட்டளை- ஞானம் ராஜினாமா
இந்த பஞ்சாயத்து சோனியா காந்திக்கும் போனது. சோனியாவோ, ஞானதேசிகனை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். இதனால் சென்னை திரும்பிய ஞானதேசிகன், ஜி.கே.வாசனுடன் ஆலோசனை நடத்திவிட்டு தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
இளங்கோவன் புதிய தலைவர்
இதனிடையே ஞானதேசிகனின் ராஜினாமாவை உடனே ஏற்ற காங்கிரஸ் மேலிடம், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவித்தது.
சென்னையில் ஆலோசனைக் கூட்டம்
இதனைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்திய ஜி.கே.வான், தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். இதற்காக சென்னையில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இன்று காலை 9.30 மணி முதல் 12 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பீட்டரும் பங்கேற்பு
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் உள்ள காங்கிரஸின் 59 மாவட்டங்களில் 28 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் முன்னாள் எம்.பி.யும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பீட்டர் அல்போன்ஸும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதிய கட்சி
இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார்.
திருச்சியில் பெயர் கொடி- அறிவிப்பு
மேலும் திருச்சியில் விரைவில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படும் என்றார்.
யார்? யார் பங்கேற்பு
சென்னையில் இன்று வாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் விவரம்:
தற்போதைய சட்டசபை எம்.எல்.ஏக்கள் பட்டுக்கோட்டை ரெங்கராஜன், கிள்ளியூர் ஜான் ஜேக்கப், முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், என்.எஸ்.வி. சித்தன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்.