50 கேட்கும் காங்கிரஸ்... 25க்கு மேல் போக விரும்பாத திமுக.. 35க்குள் படியலாம்!
சென்னை: திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டு விட்ட போதிலும் கூட கடந்த 2011 தேர்தலைப் போல இந்த முறை காங்கிரஸுக்கு சீட் கிடைக்காது என்பது உறுதி. கடந்த முறையைப் போல காங்கிரஸ் கேட்பதை நிச்சயம் திமுக தராது. மேலும் அடியோடு சீட் எண்ணிக்கையையும் திமுக குறைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி அடாவடித்தனமாக திமுகவின் பொறுமையை சோதித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. திமுகவும் சில பல காரணங்களுக்காக காங்கிரஸின் சோதனையைப் பொறுத்துக் கொண்டது.
அப்படி இப்படிப் போராடி 63 தொகுதிகளை திமுகவிடமிருந்து பறித்தது காங்கிரஸ். இதற்காக பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் ஒன்றை திமுக குறைக்கும் நிலையும் ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
மீண்டும் கை குலுக்கிய திமுக - காங்கிரஸ்
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இடையில் வந்த லோக்சபா தேர்தலின்போது பிரிந்த திமுகவும், காங்கிரஸும் தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்காக கை கோர்த்துள்ளன.
குலாம் நபி ஆசாத்
நேற்று சென்னையில் தி்முக தலைவர் கருணாநிதியை, குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசி கூட்டணி உருவானதை முறைப்படி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
எத்தனை சீட் கிடைக்கும்?
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்டு திமுகவை நெருக்கியது. கடைசி வரை தேமுதிக தன் பக்கம் வரும் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, அது திடீரென அதிமுக பக்கம் போய் விட்டதால் வேறு வழியின்றி காங்கிரஸை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டது.
63 தொகுதிகள்
இதையடுத்து காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை ஒதுக்கித் தர திமுக ஒத்துக் கொண்டது. இதனால் பாமகவுக்கு ஒதுக்கிய 31 தொகுதிகளிலிருந்து ஒன்றையும் முஸ்லீம் லீக் கட்சிக்குக் கொடுத்ததில் இருந்து ஒன்றையும் பறித்து காங்கிரஸுக்குக் கொடுத்து அதை சமாதானப்படுத்தியது திமுக.
இப்போது 25தான்
ஆனால் இந்த முறை காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளதாம் திமுக. அதற்கு மேல் வாய்ப்பில்லை என்றும் திமுக கூறி வருகிறதாம்.
தேமுதிக வரும் என்ற நம்பிக்கை
தேமுதிக தனது கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையில்தான் காங்கிரஸுக்கு சீட்டை குறைத்து ஒதுக்க தீர்மானித்துள்ளதாம் திமுக.
50 கேட்க விரும்பும் காங்கிரஸ்
இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் குறைந்தது 50 தொகுதிகளைக் கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனராம். அதற்குக் கீழ் போனால் காங்கிரஸின் மரியாதைக்கு அது பங்கமாக அமையும் என்பது அவர்களது எண்ணம்.
கெஞ்சிக் கேட்டால் 30-35 கிடைக்கலாம்
காலில் விழாத குறையாக காங்கிரஸ் கட்சி கெஞ்சிக் கேட்டால் திமுக எண்ணிக்கையை சற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிகபட்சம் 35 தொகுதிகளுக்கு மேல் திமுக போகாது என்றும் சொல்லப்படுகிறது.
தேமுதிக போக்கைப் பொறுத்து அமையும்
வரும் நாட்களில் தேமுதிகவின் போக்கு உள்ளிட்டவற்றைப் பொறுத்தே காங்கிரஸுக்குக் கிடைக்கப் போகும் தொகுதிகளின் எண்ணி்க்கை அமையும் என்று தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தேமுதிகவைக் கூட்டிக் கொண்டு வரும் வேலையை காங்கிரஸ் தலையில் திமுக போட்டுள்ளது என்பதுதான்.