ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலை போட்டு வட இந்திய காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலை போட்டு வட இந்திய காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் என்று கூறப்பட்டவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு உதவியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் அசாதாரண கால தாமதம் செய்ததைக் காரணம் காட்டி, தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

மேலும் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதை மாநில அரசின் முடிவுக்கு விட்டுவிட்டனர் நீதிபதிகள்.
இந்த உத்தரவு வெளியான 24 மணி நேரத்துக்குள், பேரறிவாளன், முருகன், சாந்தன் மட்டுமல்ல, 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்தே விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, அதற்கு எதிரான பரப்புரையை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டன. விடுதலை உத்தரவு பிறப்பித்த ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான, கேவலமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் காங்கிரஸ்காரர்களும், வட இந்தியர்களில் ஒரு பகுதியினரும்.
மும்பையில் நேற்று காங்கிரஸ்காரர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படத்துக்கு செருப்பு மாலையும், ராஜீவ் காந்திக்கு மலர் மாலையும் அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் ஜெயலலிதாவை இந்தியில் மோசமான வார்த்தைகளால் திட்டி கோஷங்கள் எழுப்பினர்.
8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான, தேர்தல் மூலம் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகத்திலேயே இப்படி மோசமாக கேவலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications