காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொத்துக்கிட்டு ஊத்துது வானம்.. நிரம்பும் தமிழக அணைகள்!
காவிரி நீர்பிடிப்பு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை காரணமாக தமிழக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னை : காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சிப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்புப்பகுதிகளில் தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் வழியாக வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் எட்டாவது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் 7வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையால் வனப்பகுதி வழியாக அருவிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர் அதிகாரிகள்.
21வது நாளாக எச்சரிக்கை
இதே போன்று தென்பென்னைஆற்றங்கரையோம் உள்ள மக்களுக்கு 21 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தை கடக்க வேண்டாம்
கே.ஆர்.பி அணை நிரம்பியதால் ஆற்றில் திறந்து விடும் நீரின் அளவு 3 ஆயிரத்து 827 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் கே.ஆர்.பி அணையை யாரும் சுற்றிப் பார்க்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதே போன்று தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ மீன்பிடிக்கவோ வேண்டாம் என 5 மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஓசூர் பாதகோட்டா கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என்று 7வது நாளாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் 2 அடி உயர்வு
செலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. குக்கலப்பள்ளி, ஆழியாளம் உள்ளிட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,751 கனஅடியில் இருந்து 22,077 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 71.18 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 33.72 டிஎம்சியாகவும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 700 கனஅடியாகவும் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீரும் உயர்வு
கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6000 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 2000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.இதே போன்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.33 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்இருப்பு 9.1 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3656 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இதே போன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியை எட்டி உள்ளது.