பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி!
பழனி: தை பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனி திருத்தலத்தில் நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் நெரிசல் இருந்த காலம் இப்போது மலையேறிவிட்ட காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் மக்களின் வாழ்வியலில் பெருமளவு மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே பார்க்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் தொடங்கி எல்லாமே தலைகீழ் மாற்றங்களாகிவிட்டன.
வாழ்வியல் முறைகளிலும் பல மாற்றங்களைக் காண முடிகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்காக பாரம்பரிய இயற்கை உணவுகளை நாடிச் செல்வது அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. இதே நிலைதான் ஆன்மீக திருவிழாக்களிலும் எதிரொலிக்கிறது.
சபரிமலை கட்டுப்பாடுகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு காலங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து மலையேறுவர். பலரும் பாரம்பரிய பெருவழிப்பாதையே மலைகளை கடந்து ஐயப்பனை காண யாத்திரை செல்வர். ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம், நாளொன்றுக்கு இத்தனை ஆயிரம்பேர்தான் அனுமதி, அதுவும் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா
இதே நிலைமைதான் நமது தமிழகத்தின் திருக்கோவில்களும். கொரோனா அச்சத்தாலும் எங்கே கொரோனா லாக்டவுன் அமல்படுத்திவிடுவார்களோ என்கிற சந்தேகத்தாலும் பழனியில் குறைவான பக்தர்களைத்தான் பார்க்க முடிகிறது. பழனியில் பங்குனி உத்திர திருவிழா காலம் உச்சகட்ட சீசன் காலம். பல்வேறு பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து கலசம் கட்டி காவடிகள் எடுத்து வந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து 100, 200 பேர் பாதயாத்திரையாக கலசங்களை சுமந்து கொண்டு காவடியாட்டத்துடன் பழனிக்கு செல்வர். பழனியில் இந்த முருக பக்தர்களின் காவடி ஆட்டம் கண்கொள்ளாத காட்சியாக இருக்கும்.
சொற்ப எண்ணிக்கை
இப்போது நீங்கள் பழனிக்கு செல்லும் பாதையில் விரல்விட்டு எண்ணக் கூடிய பாதயாத்திரை பக்தர்களைத்தான் பார்க்க முடிகிறது. பொதுவாக பழனி பாதயாத்திரை காலத்தில் வழி எங்கும் சீரியல் தோரணங்கள், பக்தர்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர், மோர் பந்தல்கள், அன்னதான கூடங்கள் என வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி பகுதிகள் அமர்க்களமாகவே இருக்கும். இந்த முறை அப்படி எதுவும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பாரம்பரியமாக கட்டிவிடப்பட்ட மண்டபங்களில் சொற்ப எண்ணிக்கையில்தான் பக்தர்களை பார்க்க முடிந்தது.
நெரிசலே இல்லாத பழனி
பழனி நகரமோ பரிதாபமாகத்தான் இருக்கிறது. பக்தர்கள் நெரிசல் எதுவும் இல்லை. மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் கலசங்களும் தீர்த்த காவடிகளையும் பார்க்க முடிகிறது. இழுவை ரயிலான விஞ்ச்சில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுகிற அளவுதான் இருக்கின்றன. அதுவும் ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தவர்கள் எண்ணிக்கைதான் சற்று கூடுதலாகவும் பார்க்க முடிகிறது.
25,000 பேர்தான் அனுமதி
இப்போது பழனி முருகன் கோவிலில் ஒருநாளைக்கு 25,000 பேர் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று முதல் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கோவில் நிர்வாகம் மட்டுமே இந்த தங்கரத தேர் பவனியை நடத்துகிறது.
பழனி வர்த்தகம் பாதிப்பு
இதனால் பழனியில் வர்த்தகமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கம் போல பழனி மலையில் சுவாமியை நெருக்கமாக பார்க்க விருப்பமா? அர்ச்சனை செய்ய வேண்டுமா? ஒரு ஆளுக்கு இத்தனை ரூபாய் கொடுங்க என்கிற புரோக்கர்களின் தொல்லைகளுக்கும் அந்த பணத்தை பங்கு போட முட்டி மோதும் காட்சிகளும் இந்த கொரோனா காலத்திலும் குறைவில்லாமல்தான் இருப்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டியதும் உள்ளது.
அப்பனே! முருகா!!